பெல்ஜியம் துப்பாக்கிசூடு - ஐரோப்பிய ஒன்றிய தலைவர் இரங்கல்

ஐரோப்பா நாடான பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் நேற்று இரவு பெல்ஜியம்-சுவீடன் கால்பந்து அணிகள் மோதிய, யூரோ சாம்பியன்ஷிப் தகுதி சுற்று போட்டி நடந்தது.
இப்போட்டி நடந்த மைதானத்தில் இருந்து சிறிது தூரத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடினர். பின்னர் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சுவீடனைச் சேர்ந்த 2 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என்பது தெரிய வந்தது.
தாக்குதல் நடத்திய நபர், வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறும் போது, "எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி. நான் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாம் விரும்புகிறோம். நம்மை வெறுப்பவர்களை வெறுக்கிறோம். நான் சுவீடன் நாட்டவரை கொன்றுள்ளேன்" என்று கூறினார்.
இதனால் பெல்ஜியத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயங்கரவாத தாக்குதலையடுத்து பெல்ஜியம்-சுவீடன் மோதிய கால்பந்து போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.
அப்போது மைதானத்தில் 35 ஆயிரம் ரசிகர்கள் இருந்தனர். அவர்கள் மைதானத்திலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு ரசிகர்கள் பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் சுவீடன் கால்பந்து அணி பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது. தாக்குதல் நடத்திய நபர், துனிசியா வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், பிரசெல்சில் வசித்து வந்ததும் தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.



