மத்திய கிழக்கில் தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தில் 24 கோடி ரூபாய் மோசடி

#SriLanka #Court Order
Prathees
1 year ago
மத்திய கிழக்கில் தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தில் 24 கோடி ரூபாய் மோசடி

அபுதாபியிலுள்ள 'டெல்மா எக்ஸ்சேஞ்ச்' பணப்பரிவர்த்தனை மையத்தின் முன்னாள் செயற்பாட்டு முகாமையாளர் பொன்வீர ஆராச்சி, ஐந்து மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் தமது குடும்பங்களுக்கு அனுப்பிய மாதாந்தப் பணத்தில் 243,193,250.08 ரூபாவை (5,813,766.00 திர்ஹம்கள்) மோசடி செய்துள்ளார்.

 அவரது மனைவி, உறவினர்களின் கணக்குகள் மற்றும் சந்தேக நபரான சின்ஹாவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிவித்தனர்.

 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 'டெல்மா எக்ஸ்சேஞ்ச்' நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளராக கடமையாற்றிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அபுதாபி பணப்பரிவர்த்தனை நிலையத்தில் இலங்கையர்கள் முறைப்பாடு செய்து மோசடியை வெளிப்படுத்திய போது சந்தேக நபர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் டெல்மா செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலதிக விசாரணை அறிக்கை மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனா வீரசிங்க முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது. சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிதிக்குற்றப்பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிரோஷன், உண்மைகளை சமர்ப்பித்ததுடன், முகங்கந்தலுவ, இலிப்பாதெனிய, ஹலவத்தையில் வசிக்கும் சந்தேகநபர் ஹலவத்தையில் ஏக்கர் காணியை உரிய வகையில் கொள்வனவு செய்துள்ளார் என்பதற்கான காணி உறுதிப் பிரதிகளையும் சமர்ப்பித்தார்.

 சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிரோஷன் தெரிவித்துள்ளார். டெல்மா பரிவர்த்தனை மையத்தில் பெறப்பட்ட பணத்தின் இலக்கங்களை மாற்றி மோசடி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 2011 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க சட்டத்தின் படி திருத்தப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணமோசடிச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் குற்றம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸ் பரிசோதகர் குறிப்பிட்டார்.

 இரு தரப்பு உண்மைகளையும் கருத்திற்கொண்ட நீதவான் லோச்சனா வீரசிங்க, சந்தேகநபருக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். 

சந்தேக நபரை தலா 150 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

 பிணையில் வைப்பிலிடப்பட்டவர்களின் சொத்துக்கள் தொடர்பில் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதவான், சொத்துக்களை வேறு தரப்பினருக்கு மாற்றுவதை தடுக்கும் வகையில் காணி பதிவு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!