தலைமன்னாரில் 10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின், ஹஷிஸ், ஐஸ் மீட்பு

தலைமன்னார் ஊறுமலை கடற்கரையில் இன்று (16) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் சோதனையின் போது சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மற்றும் ஹஷிஸ் போதைப் பொருட்கள் டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடமத்திய கடற்படை தளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இன்று காலை ஊறுமலை கடற்கரையில் அவசர சோதனையின் போது கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு சோதனையின் போது கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 4 கிலோ ஐஸ் போதைப்பொருள், 1 கிலோ 34 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோ 254 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
இவை டிங்கி படகில் 10 பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை இந்தியாவில் இருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்டு தென் பகுதிக்கு கொண்டு செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னாரம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.



