இலங்கையில் ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவுவ நடவடிக்கை!

இலங்கையில் ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (13.10) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த திட்டத்திற்காக பிங்கிரிய மற்றும் இரணைவில ஆகிய பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போது துறைமுக நகரை அமைக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த சீசனில் தற்காலிகமாக துறைமுக நகரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் பணியை மேற்கொண்டோம்.மூன்றாம் தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த துறைமுக நகர கட்டுமான பணிகள் நடந்து வருகிறது என்றே கூற வேண்டும். இதற்காக 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஹார்பர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 80% நிர்மாணப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
துறைமுக நகரத்தில் வர்த்தகம் செய்வதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளது எனவும், பல செயல்பாட்டு விதிமுறைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சுமார் 1.6 பில்லியன் டொலர்கள் முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சட்ட கட்டமைப்பு தயாரிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது அவசியம் எனவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்த முதலீடுகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.



