ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்திற்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்திற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் கல்விசார் ஆராய்ச்சி கொடுப்பனவை அதிகரிப்பது மற்றும் சம்பளம் பெறும் போது அறவிடப்படும் வரியில் இருந்து கொடுப்பனவை விலக்குவது போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் அனைத்து மக்களும் எதிர்நோக்கும் பொருளாதார சிரமங்களை அரசாங்கம் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும், தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளை விரைவாக தீர்த்து அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சுற்றறிக்கைகளின்படி கல்வி ஆராய்ச்சி கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் இல்லையென்றாலும், தற்போதுள்ள வரிக் கொள்கைகள் மற்றும் கல்விசார் ஆராய்ச்சி கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக மற்றுமொரு சுற்றறிக்கையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
03 வாரங்களுக்குள் அவரிடம் இது குறித்து தெரிவிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இரத்துச் செய்து முழு பல்கலைக்கழக நிர்வாகத்தையும் கலிபோர்னியா மற்றும் பீஜிங் பல்கலைக்கழக முறைமைகளுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிஹா, இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.



