தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் மற்றும் காசா அமைப்புக்கு வலியுறுத்திய புதின்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. இருவரும் நடத்திவரும் தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருக்கின்றனர். ஹமாஸ் அமைப்பினருக்கு தக்க பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை காசா முற்றுகை பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
அங்கு ஒரு சொட்டு தண்ணீரோ, வெளிச்சமோ இருக்காது என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரித்திருக்கிறார். இந்நிலையில் இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் மற்றும் காசா அமைப்புக்கு ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அவர், "கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும்.
பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் ரத்தம் சிந்துவதை நிறுத்த வேண்டும் என்பதே ரஷியாவின் குறிக்கோள்.
அமைதி திரும்ப அனைத்து வழிகளிலும் ஒருங்கிணைப்பு வேலைகளை ரஷியா மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.



