மட்டக்களப்பில் பதற்ற நிலை : காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாள் விஜயமாக மட்டகளப்பிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மயிலந்தனை மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வுக் கோரி பண்ணையாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு செங்கல்லடியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தின்போது பொலிஸாருக்கும் - போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள், பொலிஸாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்ட நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், உள்நாட்டில் இன மத ரீதியான பக்கச்சார்புடனுடம் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் செயற்படுவதுடன் நில ஆக்கிரமிப்பு பௌத்த மயமாக்கத்தில் ஈடுபடுகின்றீர்கள் , ஈஸ்டர் தாக்குதலுக்கு நம்பிக்கையான விசாரணை இல்லை, சிறுவர்களும் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளார்கள் எனவே எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என பல கோரிக்கைகளை உள்ளடக்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.
இதேவேளைஇச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தலைவி அ. அமலநாயகி மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொலிசாரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்பட்டதாக தெரியவருகிறது.
இதனூடாக சிங்கள பௌத்த இனவாத அரசின் கோர முகம் வெளிப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்ததுடன் உடனடியாக சர்வதேசம் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.



