புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் பரிதாப மரணம் - மெக்சிக்கோவில் சம்பவம்!

தெற்கு மெக்சிக்கோவில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிற்கு செல்லும் நோக்கியில் சட்டவிரோதமான முறையில் ஆயிரக்கணக்கானவர்கள் மெக்சிக்கோவின் ஊடாக பேருந்துகள், பாரவூர்திகள் என்பவற்றில் பயணம் மேற்கொள்கின்றனர்.
அவர்கள் பயணிக்கும் பாதை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாலேயே இவ்வாறு வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற குறித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் வெனிசுவேலா மற்றும் ஹைட்டி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 8 ஆயிரத்து 200க்கும் அதிகமான புகலிடக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவை அடைய முயற்சித்தவர்கள் என இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.



