உயிர் பல்வகைமை அழிவடையும் வேகம் பத்தாயிரம் மடங்காக அதிகரிப்பு: ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
உயிர் பல்வகைமை அழிவடையும் வேகம் பத்தாயிரம் மடங்காக அதிகரிப்பு: ஜனாதிபதி

காலநிலை மாற்றம் மற்றும் உயிர் பல்வகைத்தன்மை குறைவடைதல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும்போது உலக அரசியலும் செல்வந்த நாடுகளின் மோதல்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் 05 ஆவது அமர்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். ‘மனித குலம் தற்காலத்தில் தனது இருப்பு தொடர்பிலான பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. 

உலகில் அறியப்பட்டிருக்கும் 8 சதவீதமான உயிரினங்கள் முற்றாக அழிந்துபோயுள்ளன. மேலும் 22 சதவீதமான உயிரினங்கள் அழிவடைந்து வருகின்றன. இவ்வாறு 100 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விடவும் உலகில் உயிர் பல்ககைமை அழிவடையும் வேகம் பத்தாயிரம் மடங்காக அதிகரித்துள்ளது. 

சுற்றாடல் பாதிப்பு மற்றும் உயிர் பல்வகைத்தன்மை அழிவடைவதன் விளைவாக வறுமை, பட்டினி, சுகாதாரம், நகர காலநிலை என்பவற்றோடு கடல் மற்றும் நிலம் சார்ந்த 44 நிலையான அபிவிருத்தி இலக்குகளில் 35 இலக்குகள் அடையும் முயற்சிகள் தற்போதும் தடைப்பட்டுள்ளன. 

காலநிலை மாற்றத்தை பொறுத்தவரையில், 2030 முதல் 2052 ஆம் ஆண்டுக்கு இடையில், புவி வெப்பமடைதல் 1.5 வீதத்திற்கும் மேலாக அதிகரிக்கக்கூடும் என காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு மதிப்பீடு செய்துள்ளது. விஞ்ஞானிகளின் சங்கத்தில் அங்கம் வகிக்கும் சஞ்சலி டி சில்வா என்னும் இளம் விஞ்ஞானி இலங்கை நாளாந்தம் காலநிலை மாற்றங்களை எதிர்கொண்டு வருவதாக தனது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். காலநிலை பாதிப்புக்களை தடுக்க விரும்பாத சில நாடுகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்கு காரணம் என்பதோடு, எனது குடும்பமாக கருதும் எனது நாட்டு மக்களுக்கு அந்த பாதிப்புக்கள் நேரக்கூடாது என்றே விரும்புகிறேன். 

ஜேர்மனி கண்காணிப்பு அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் காலநிலை அனர்த்தம் தொடர்பிலான சுட்டியில், ஜேர்மனியையும், இலங்கைளையும் கடுமையான காலநிலை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகள் வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இலங்கையின் நிகழ்ச்சிநிரல் வரைபடம் வெளியிடப்படும் உலகளாவிய பல்வகைத்தன்மை கட்டமைப்பின் இலக்குகளை அடைவதற்காக 2016 முதல் 2022 வரையிலான இலங்கையின் தேசிய உயிர் பல்வகைமைக்கான மூலோபாய செயல் திட்டத்தினை புதுப்பிக்கும் செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளோம்.

 பழமையான சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்காக உயிரினங்கள் குறித்த தேசியக் கொள்கையை வகுக்க சுற்றாடல் அமைச்சிற்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.

 பொதுவான மற்றும் அபாயகரமான கழிவுகளின் ஒன்பது வகைகளை உள்ளடக்கிய வகையில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை இலங்கை உருவாக்கியுள்ளது. நாட்டில் இரசாயனப் பொருட்கள் முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தவதற்காக இரசாயனப் பொருட்கள் முகாமைத்துவ தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது. பசுமை கொள்முதல் கொள்கை மற்றும் பசுமை பெயரிடல் கட்டமைப்பு இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும். 

காலநிலை மாற்றம், உயிர் பல்வகைமை இழப்பு மற்றும் சூழல் மாசடைதல் ஆகிய மூன்று சிக்கல்களைத் தீர்க்க புதிய அறிவு மற்றும் நடைமுறைகளைப் பயன்படுத்த புதிய காலநிலை மாற்றச் சட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பசுமைப் பொருளாதாரத்திற்கான மாற்றத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். ஆனால் அதற்கான செலவுகள் உள்ளன. 

2023 முதல் 2042 வரை காலநிலை சுபீட்சத் திட்டத்தை செயல்படுத்த 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். காலநிலை மாற்றத்திற்கு குறைந்தளவில் பொறுப்பான நாடுகள், இழப்புகளின் விகிதாசாரத்தில் கூடிய பங்கை ஏற்காமல் இருப்பதை உறுதிசெய்ய, எங்களுக்கு ஒரு காலநிலை நியாய மன்றம் தேவை. இதை நிறைவேற்ற வேண்டும் என்று நாம் கூட்டாகக் குரல் எழுப்ப வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு உலகளாவிய அபிலாசைகள் போதுமானதாக இல்லை என்பது உண்மையிலேயே வருந்தத்தக்கது.

 வளரும் நாடுகளில் ஏற்படும் காலநிலை மாற்றப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தத் தேவையான உத்தரவாதங்களை வழங்கவும் மற்றும் தனியார் நிதி வழங்குதலை ஊக்குவிக்கவும் புதிய அபிவிருத்தி வங்கியின் எஞ்சிய நிதியை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரிட்ஜ் டவுன் முன்முயற்சி தெளிவாகக் கூறியுள்ளது. 

2050இற்கும் அப்பாலான இலக்குகளை கொண்டு நகரும் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் சுயமான ஈடுபாட்டை நாம் வலியுறுத்த வேண்டும். காலநிலை பாதிப்புக்களை மனித உரிமைகளாக ஏற்றுக்கொள்ளும் விடயமாகவும் கருத முடியும். அதுவே உயிர்வாழும் உரிமையின் அர்த்தமாகும். காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவது தொடர்பிலான பொறுப்புக்களை கொண்டுள்ள நாடுகள் தமது பொறுப்பு துறந்துச் செயற்படுமாயின் மக்களின் உயிரைப் பறிக்கும் செயலாக அமையும்.’ என்று குறிப்பிட்டார் ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் 05வது அமர்வு கொழும்பில் நேற்று நடைபெற்றது.

 இதன்போது மாநாட்டில் கலந்துகொண்ட ஈரானின் துணை ஜனாதிபதியும் சுற்றுச்சூழல் திணைக்களத்தின் தலைவருமான அலி சலாஜெ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

 காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இரு நாடுகளும் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும், அதன் போதான ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்தனர். 2024 பெப்ரவரி 24 தொடக்கம் மார்ச் 01 ஆம் திகதி வரை நைரோபில் நடைபெறவிருக்கும் ஆறாவது ஐ.நா சுற்றாடல் சபையின் அமர்விற்கு இணையாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 நிகழ்வின் நிறைவில், ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 இந் நிகழ்வில் ஈரானின் துணை ஜனாதிபதி அலி சலாஜெகே, அமைச்சர்களான நசீர் அஹமட், அலி சப்ரி, விஜேதாச ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்டத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் எலிசபெத் மருமா மிரேமா, சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான பிரதான குழுவின் பிரதிநிதி அனிவ மேரி கிளார்க் மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!