ஹரக் கட்டா தப்பிக்க தயாராக இருந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா என்பவர் தப்பிச் செல்வதற்காக தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்தில் உள்ள போக்குவரத்துப் பிரிவுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் மீது விசாரணையாளர்களின் கவனம் குவிந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பணிப்பாளரின் வாகனத் தரிப்பிடத்திற்கு அருகாமையில் இது நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிளின் சேஸ் எண்கள் மாற்றப்பட்டு அதன் எரிபொருள் தாங்கி முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
அதன்படி, ஹரக் கட்டா தப்புவதற்காக இது தயாரிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த மோட்டார் சைக்கிளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்குள் கொண்டு வந்தது யார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் எனவும் விசாரணை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிசிடிவி அமைப்பு செயலிழந்திருந்ததாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஹரக் கட்டாவுக்குத் தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு போக்குவரத்து வசதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கொழும்பு குற்றப் பிரிவினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல ஹரக் கட்டா முயற்சித்தமை தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் கொழும்பு குற்றப் பிரிவினரும் ஆரம்பித்துள்ள விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.