நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்து : இருவர் பலி!

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவங்கள் நேற்று (25.09) இடம்பெற்றுள்ளன.
இதன்படி சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பரங்கியமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வலவ்வென பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடுவெல ஹன்வெல்ல - கொழும்பு வீதியில் கடுவெல நகருக்கு அருகில், பாதசாரி கடவையில் நடந்து சென்ற பெண் மீது லொறி ஒன்று மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
அவர் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



