சிறுவர்களின் நிர்வாண ஒளிப்படங்களை விற்பனை செய்து கிரிப்டோ கரன்சி மூலம் சம்பாதிக்கும் சீவரதாரி!

இலங்கையில் சிறுவர், சிறுமியரின் நிர்வாண ஒளிப்படங்களை விற்பனை செய்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் சம்பாதிக்கும் நபர் ஒருவர் பற்றிய அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ராகமையைச் சுற்றியுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் அடங்கிய படச்சட்டங்களை விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
அவர் கிரிப்டோகரன்சி மூலம் பணம் பெறுவதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி நேற்று (19.09) அப்பகுதிக்கு சென்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து இந்த கொள்ளை கும்பல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
குறித்த விகாரையை சோதனை செய்ததில், அங்கிருந்த 19 வயதுடைய சீவரதாரி ஒருவரே இந்த வேலையை செய்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பயன்படுத்திய கணனியில் 7 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சிறுமிகளின் சுமார் 1500 நிர்வாணக் காட்சிகளை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்ததுடன், அதில் 80 சதவீதம் பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு அப்ளிகேஷன்கள் மூலம் பிறரால் வெளியிடப்படும் நிர்வாண காட்சிகளை தான் சேகரித்து அதை விநியோகம் செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சந்தேகத்திற்குரிய சீவரதாரி தான் காணொளி காட்சிகளை விற்று சம்பாதிக்கும் பணத்தை அப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதோடு, சிறு வியாபாரமாக கிராபிக்ஸ் காட்சிகளை தயாரித்து விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தை வரவு வைப்பதாக வங்கிக் கணக்கின் உரிமையாளரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சீவரதாரியை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.



