நீதவான் மீது லேசர் பேனாக் கற்றையை பயன்படுத்திய ஆசிரியர் கைது

டியூஷன் வகுப்புகளில் விளக்கமளிக்கப் பயன்படுத்தப்பட்ட லேசர் பேனாவை நீதிமன்றத்தில் தவறாகப் பயன்படுத்ய ஆசிரியர் ஒருவர் மீது கடுவெல நீதிமன்றில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார வழக்கு ஒன்றை நடத்தியபோது லேசர் பேனாக் கற்றையை நீதவான் மீது காட்டி கடமைக்கு குறுக்கிட்டதால் நீதிமன்றப் பதிவாளர் திருமதி திலுபா பிரியதர்ஷனி கடுவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தை சோதனையிட்டு சந்தேக நபரைக் கைது செய்தனர். சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார இன்று (15) உத்தரவிட்டார்.
சந்தேக நபர் தேசிய மனநல நிறுவனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மனநல மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட பின் உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், சந்தேக நபரின் தொலைபேசி தரவு பதிவுகளை சரிபார்த்து அந்த அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
கோட்டே கொட்டுவெம்மா வீதியில் வசிக்கும் சதுஷ்க ஜனித் டயஸ் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



