அண்ணளவாக 13300 பேரை பலிவாங்கிய லிபியா புயல். உலக நாடுகள் உதவி.

லிபியாவில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் மழையினால் உயிழந்தோரின் எண்ணிக்கை 11,300ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10,100 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் எனப்படும் இந்த புயல் கடந்த 10ஆம் திகதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்த நிலையில் அப்போது அது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நதியில் கட்டப்பட்டுள்ள இரு அணைகள் உடைந்தன.
இதனால் டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்நிலையில் தற்போது புயல் மற்றும் மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக உயிழந்தோரின் எண்ணிக்கை 11,300ஐ தாண்டியுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிபியாவுக்கு துருக்கி, எகிப்து, கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் 150 டொன் உணவு, நிவாரணப் பொருட்கள், மருந்துகள் கொண்ட இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளது.
குவைத்தில் இருந்து 40 டொன் நிவாரணப் பொருட்களுடன் விமானம் அனுப்பப்பட்டுள்ளது. ஜோர்தான் இராணுவ விமானத்தில் உணவுப் பொதிகள், கூடாரங்கள், போர்வைகள், விரிப்புகள் போன்றவற்றை அனுப்பியுள்ளது.
ஜெர்மனி, ரொமேனியா, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.
மேலும், இவ்வாறான பேரிடர் நிலைமைகள் காரணமாக ஏற்படக்கூடிய தொற்று நோய்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



