வினோ நோகராதலிங்கம், கஜேந்திரன் ஆகியோருக்கு பிணை வழங்கி உத்தரவு!

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
வழிபாட்டு உரிமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக குறித்த விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சுமேத தேரர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வினோநோகராதலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் க.சிவநேசன், து.ரவிகரன் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் வழக்கு தவணையில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் முன்னிலையாகாத நிலையில் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (14.09) இடம்பெற்ற வழக்கில் முன்னிலையாகிய இருவரும் கடந்த வழக்கில் முன்னிலையாகும் அறிவித்தல் தமக்கு கிடைத்திருக்கவில்லையென அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களை பிணையில் விடுவிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கை 2024 ஜனவரி 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.



