ஒரு ஏக்கர் மூன்று றூட் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு செல்லும் வீதிக்கான காணி இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள பொது காணிகள், மக்களின் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறித்த காணி பாடசாலை பயன்பாட்டுக்காக இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.
குறித்த கையளிப்பு நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி கலந்துகொண்டு காணியை கையளித்தார்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜெயகரன், 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயவர்தன, மத்திய கல்லூரி முதல்வர், இராணுவ உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கிளிநொச்சி டிப்போ சத்தியில் அமைந்துள்ள யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில் அமைந்துள்ள காணியே இன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி காணி விடுவிப்பு ஆவணத்தை அரசாங்க அதிபரிடம் கையளித்தார். குறித்த ஆவணம் அரசாங்க அதிபரினால் பிரதேச செயலாளரிடம் மேடையில் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



