பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேரேறி அருள்பாலித்தார் நல்லூர்க் கந்தன்!

இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நல்லூர் கந்தன் உற்சவத்தின் 24 ஆம் நாளான இன்று தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் வெகு விமர்சையாக இடம்பெறுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ நல்லையம்பதியான் தேரேறி வலம் வந்த காட்சிகள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
நல்லூர் கந்தனை தரிசித்து ஆசிகளை பெற பக்தர் கோடிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.
தென்பகுதியிலிருந்து சிறப்பு புகையிரதங்களும் நல்லூர் திருவிழாவை முன்னிட்டு சேவையில் ஈடுபடுகின்றன.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவானது கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து மாத்திரமல்லாது தென்னிலங்கையில் இருந்து அதிகளவு வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கையினை நல்லூர் சூழலில் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை நேற்றைய தினம் நல்லூர் கந்தனுக்கு சப்பறத் திருவிழா இடம்பெற்றது.
அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதினால் சன நெருக்கடியை கட்டுப்படுத்தமுடியாமல் காவல்துறையினரும் சாரணர்களும் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
சிலர் மூச்சுத்திணறலினால் அவதியுற்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் மாநகரசபையினர் மீது கடும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



