சனல்-04 வெளியிட்ட காணொலி : அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுக்கும் சுரேஷ் சாலே!

சனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சனல் 4 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வீடியோ கிளிப்பை சமீபத்தில் வெளியிட்டது.
அதில் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த பல்வேறு தகவல்களை சுரேஷ் சாலே குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் சமீபகாலமாக பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தன்னை சங்கடப்படுத்தும் வகையில் சனல் 04 வேண்டுமென்றே இந்த காணொளியை ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்தில் சுரேஷ் சாலேமுறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலையின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்டதரணி பசன் வீரசிங்க, சனல்-04 காணொலியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுப்பதாகவும், அந்தக் காலப்பகுதியில் தான் இலங்கையில் தங்கியிருக்கவில்லை என சுரேஷ் சாலே எழுத்துமூலம் அலைவரிசைக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.



