கறுப்பு பணத்தை ஒழிக்க குழு நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான புதிய சட்டங்களை இயற்றுவதற்கும், தற்போதுள்ள சட்டங்களை அமுல்படுத்துவதற்கும் முப்படைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி புவனேகா அலுவிஹாரே, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் ஷிரந்த ஹேரத் ஆகியோர் அடங்குவர்.
கறுப்புப் பணத்தை மாற்றுவதையும் பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்புவதையும் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்முயற்சி எடுத்தது, அதற்காக நிதி நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.
அதன் ஒரு கிளை இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்குகிறது மற்றும் இது நிதி புலனாய்வு பிரிவு என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும், மேற்படி பணிக்குழுவினால் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆராயப்படுகிறது, மேலும் இலங்கையும் 2019 முதல் நிதித்துறையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
நாட்டில் தற்போது செயற்படும் பிரமிட் திட்டங்கள், கிரிப்டோ கரன்சிகள் போன்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான சட்டங்கள் இன்மை மற்றும் சட்டத்தை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினாலும் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் சர்வதேச செயலணி இந்த நாட்டிற்கு வந்து இந்த விடயங்களை ஆராயும் என்பதால் மேற்படி குழுவை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
சர்வதேச பிரதிநிதிகள் குழு இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இலங்கையில் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைப்பு பிரச்சினையை எழுப்பினால் அது இலங்கையின் வங்கி அமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என நிதியமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த ஆபத்தை தடுக்கும் வகையில் மேற்படி குழு நியமிக்கப்பட்டு இலங்கையில் ஏழு நிறுவனங்களை இணைத்து பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான புதிய சட்டங்களை கொண்டுவந்து தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்த உள்ளனர்.
இந்தக் குழுவானது வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் அது தொடர்பான நிறுவனங்களை ஒருங்கிணைத்து சட்டங்களை வலுப்படுத்தும்.



