பல்கலைக்கழக மாணவர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க தீர்மானம்!

பல்கலைக்கழக மாணவர்களின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராயுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் வதிவிட வசதிகளுக்காக 144 வீட்டுத் தொகுதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வீட்டுத் தொகுதியை பல்கலைக்கழகத்திடம் கையளிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்புத் தொகுதியில் சுமார் 800 மாணவர்களுக்கான குடியிருப்பு வசதிகள் வழங்கப்படுவதுடன் 450 சதுர அடியில் ஒரு வீடு இரண்டு படுக்கையறைகளைக் கொண்டதாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீட்டின் பெறுமதி சுமார் 60 இலட்சம் ரூபா எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.



