பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பிரதமர் தினேஷ் குணவர்த்தன சந்திப்பு!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக், இந்த வார தொடக்கத்தில் அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்கள் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.
அத்துடன் தனியார் துறையின் பங்களிப்புடன் புதிய முதலீட்டு திட்டங்களை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஐக்கிய இராச்சியத்தை பிரதமர் குணவர்தன வலியுறுத்தினார்.
கல்வி, வங்கி மற்றும் நிதிச் சேவைகள், மருந்துகள், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் இங்கிலாந்தின் முதலீட்டை இலங்கை ஊக்குவிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் கல்வித் துறையில் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிப்பது குறித்து உயர்ஸ்தானிகர் பட்ரிக் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து ஆங்கில மொழி கற்பித்தல் வசதிகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.



