வவுனியாவில் புதைக்கப்பட்ட இரண்டு வயது சிறுமியின் சடலத்தை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியா நெலுக்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த இரண்டு வயது சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டு சுமார் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் சடலம் காணப்படவில்லை என சிறுமியின் பெற்றோர் இன்று (08) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நெலுக்குளம் பகுதியைச் சேர்ந்த எல்.திவ்யா என்ற இரண்டு வயது சிறுமி தனது வீட்டில் உள்ள நீர்த் தாங்கிக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பின்னர்இ சிறுமியின் சடலம் கடந்த 27ம் திகதி ராசேந்திரகுளம் பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இன்று காலை சிறுமியின் உறவினர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின் போது சிறுமி புதைக்கப்பட்டிருந்த குழி தோண்டப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.
குழியில் இருந்த சவப்பெட்டி உடைக்கப்பட்டு சடலம் எடுத்துச் செல்லப்பட்டதை அவதானித்த உறவினரால் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பெற்றோரும் உரிய இடத்திற்குச் சென்று சடலம் காணவில்லை என உறுதிசெய்து நெல்லுக்குளம் பொலிஸாருக்கும் வவுனியா பொலிஸாருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் பொலிசார் விசாரணையை தொடங்கி மயானத்தில் புதைத்த உடலை சிலர் எடுத்துச் சென்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதுடன், சடலத்தை எடுத்துச் சென்றவரை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



