இலவச சுகாதாரத்தில் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளமை பயங்கரமானது! லக்ஷ்மன் கிரியெல்ல

இலவச சுகாதாரம் தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளமை மிகவும் பயங்கரமானது என்றும் அரசாங்க வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்து தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இறக்குமதியில் தலையிடுவதே .
நாட்டில் தரம் குறைந்த மருந்து இறக்குமதிக்கு காரணமாகும் அதேபோன்று தரம்குறைந்த மருந்து கொண்டுவந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது.
பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வழக்குகூட தொடுக்கவில்லை.
அத்துடன் மயக்க மருந்து, நுண்ணுயிர்கொல்லி மருந்து வழங்கியதன் மூலம் 10 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.
அதேபோன்று சிறுநீரகம் தொடர்பான சிகிச்சையில் கண்டி, பேராதனை வைத்தியசாலைகளில் 10 பேர் மரணித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. மேலும் நுவரெலியா மற்றும் கொழும்பு கண் வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சைகளுக்கு பின்னர் 70 பேரின் கண் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதில் ஒன்று தொடர்பாகவேனும் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அறிக்கைகள் பொய்யா என கேட்கிறோம். அத்துடன் நாட்டில் மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட, அரசாங்கத்திடம் மருந்து பொருட்களை கொண்டுவர பணம் இல்லாமையும் காரணமாகும். இதற்கு அரசாங்கமே பொறுப்பாகும்.
ஆரம்ப காலத்தில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களும் இறுதி நேரத்தில் அரச வைத்தியசாலைக்கே வருகின்றனர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.
மக்களின் இந்த மன நிலையை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே இந்த நிலைமையை சரி செய்வதற்கு புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும். அதற்கு தேர்தலுக்கு செல்லவேண்டும்” என்றார்.



