யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்: தாதிக்கு பயணத்தடை

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பயண தடை விதித்துள்ளது.
சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்திய சாலை, வடமாகாண ஆளூநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயதான சிறுமியினுடைய, கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த தாதியார் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் சார்பில் மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட மன்று தாதியருக்கு பயணத் தடை விதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.