சீனாவில் பணியின்போது அரசு அதிகாரிகள் ஐபோன் பயன்படுத்த தடை

உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடுகளை பணியின்போது அரசு அதிகாரிகள் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது.
சீனாவின் சந்தையில் ஐ-போன் விற்பனை பரவலாக இடம்பெற்று வருகிறது. சீனர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த வாரம் புதிய ஐ போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. வேலை நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களையும் அந்நிய நாட்டு முத்திரையிலான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.
அத்தகைய கருவிகளை அலுவலகத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் சீனா-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரிக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐ போன்கள், ஐ பேடுகளை வேலை நோக்கங்களுக்காக அரசு ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது என ரஷ்யா கடந்த மாதம் அறிவித்திருந்த பின்புலத்தில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு கவலையை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வர்த்தக போர் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தளம்பலை ஏற்படுத்தியுள்ளது.
இருநாடுகளும் மாறி மாறி பல்வேறு தடைகளை விதித்து வருவதால் இருநாடுகளும் சார்ந்துள்ள பொருளாதாரங்களும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளன.



