சிறுவர்கள் மற்றும் பெண்களை யாசகம் கேட்க வைப்பது வியாபாரமாக மாறியுள்ளது!
சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் யாசகம் கேட்பதற்கு பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும், இதனை தடுக்க உறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க மற்றும் அனுபா பாஸ்குவல் ஆகியோர் தலைமையில் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
குழந்தைகளை யாசகம் கேட்க அமர்த்துவதும், சில குழந்தைகளுக்கு போதை மருந்து கொடுத்து யாசகம் எடுக்க வைப்பதும், பெண்கள் கர்ப்பம் தரிப்பதும் வாடிக்கையாக உள்ளது எனவும் சமீபகாலங்களில் இது வியாபாரமாக மாறியிருப்பதாகவும் கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் இருந்தாலும், நடைமுறை மட்டத்தில் முறையான அமுலாக்கத்தின் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமூக சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பின் ஊடாக இந்நாட்டிலுள்ள பிச்சைக்காரர்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர்கள் பணிப்புரை விடுத்துள்ளனர்.