இரவில் கழுத்தை அறுப்பார்கள் என்று நினைக்கவில்லை - தயாசிறி!

கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றி விடுவோம் என கட்சியின் தலைவர் அஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் அதன் செயலாளர் நாயகம் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்படி கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “காரணம் என்னவென்று என்னால் நம்ப முடியவில்லை. ரணில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இந்த கட்சிக்கு ஆதரவளிக்க ஒரு குழுவினர் விரும்பினர். இறுதியில், கட்சியைப் பாதுகாத்ததற்காக நான் தூக்கி எறியப்பட்டேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை.
கட்சித் தலைவருக்கு கொஞ்சம் பயம் இருந்தது. கட்சியின் அதிகாரத்தை நான் கைப்பற்றிவிடுவேன் என்று. இரவில் கழுத்தை அறுப்பார்கள் என்று நினைக்கவில்லை.
மைத்திரிபால சிறிசேனவை நான் ஒரு தந்தையைப் போல் நேசித்தேன். தந்தைகளினாலேயே மகன்களின் கழுத்து ஏன் வெட்டப்படுகிறது என்பதுதான் கேள்வி” எனத் தெரிவித்துள்ளார்.



