நாட்டை முதலீட்டு முதலீட்டு வலயமாக மாற்ற நடவடிக்கை - ஜனாதிபதி

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை உதாரணமாகக் கொண்டு, அடுத்த 15-20 ஆண்டுகளில் நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கலை முன்னெடுத்து நாட்டை விரைவான அபிவிருத்தியை நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அப்போது அபிவிருத்தியடையாத பிரதேசமாக இருந்த பியகம பிரதேசம் வர்த்தக வலய ஸ்தாபனத்தின் மூலம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் இலங்கையே முதலீட்டு வலயமாக மாறி பல புதிய முதலீட்டு வாய்ப்புகள் உலகிற்கு திறக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் இன்று (06) பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கு பல பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும், அதனுடன் அந்த பிரதேசங்கள் அனைத்தும் வர்த்தக நகரங்களாக நிர்மாணிக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அந்தந்த மாவட்டங்களின் அபிவிருத்திக்கான முதலீட்டு வாய்ப்புகளை கொண்டுவருவதற்கு மக்கள் பிரதிநிதிகளின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இந்த கைத்தொழில் பூங்கா எமது நாட்டுக்கு ஏற்றதல்ல என சிலர் கூறினாலும் இன்று பியகம முதலீட்டு வலயம் தெற்காசியாவின் சிறந்த வர்த்தக வலயமாக மாறியுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் பியகம, கட்டுநாயக்க போன்ற கைத்தொழில்மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்று நாடு பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உழைக்கும் அதேவேளை, எதிர்கால இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை திறந்துவிடவும் அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.



