நாட்டில் கடந்த 03 மாத காலப்பகுதியில் 40இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

கடந்த 03 மாதக்காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 40 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த 03 மாதக் காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில், 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் தொடர்பில் சரியான தரவு இன்மையே குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 03 மாதங்களுக்குள், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், சந்தேக நபர்களை கைது செய்யவும் விசேட வேலைத்திடங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.



