இலங்கையில் முதலீடுகளை செய்ய ஆர்வமாக உள்ள சீன நிறுவனங்கள்!

பல்வேறு கைத்தொழில்களைச் சேர்ந்த சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை சீன முதலீட்டு ஊக்குவிப்பு மன்றம் ஷாங்காய் நகரில் கடந்த 05 ஆம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கையின் பிரதிநிதியாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கலந்து கொண்டார்.
இதன்போது மருத்துவம், சூரிய சக்தி உற்பத்தி, காற்றாலை ஆற்றல், மீன்பிடி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சீன நிறுவனங்கள், இலங்கையில் முதலீடு செய்வதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருந்து, ஆடை, ஜவுளி, மின்சாரம் மற்றும் மின்னணுவியல், இறப்பர், ஆட்டோமொபைல் பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள், மின் உபகரணங்கள், கனிம பதப்படுத்துதல் மற்றும் பிற உற்பத்தித் தொழில்கள் உட்பட பல முக்கிய முதலீட்டுப் பகுதிகளை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



