ஜி20 மாநாட்டில் உக்ரைன் விவகாரம் புயலைக் கிளப்பினால் இந்தியா எப்படி கையாளப்போகிறது?

ஜி 20 நாடுகளின் 18 ஆவது உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்தியா முதன்முறையாக நடத்தும் இந்த மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது.
சர்வதேச வர்த்தக கண்காட்சிகள் நடைபெறும் நகரின் பெரிய இடமான பிரகதி மைதானத்தில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலகின் பல தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர்.
இந்த நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின், ஜி 20 மாநாட்டில் பங்கேற்காதது சர்வதேச அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
மேலும், இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி 20 மாநாட்டில், ரஷ்யா -யுக்ரேன் போர் தொடர்பாக, வளர்ந்த அல்லது மேற்கத்திய நாடுகள் மற்றும் ‘குளோபல் சவுத்’ என்று அழைக்கப்படும் உலகின் பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதேபோன்று, டெல்லியில் நடைபெறவுள்ள மாநாட்டிலும் யுக்ரேன் போர் விவகாரம் எதிரொலிக்கும் என்பது மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், வெளியுறவு நிபுணர்கள் உள்ளிட்டோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



