மீண்டும் 56 வீதத்தால் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இவ்வருடம் நான்காவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த பிரேரணைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோருவதாக அதன் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
"இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்த IMF மீண்டும் முன்மொழிந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு இரண்டு முறை மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று அரசு கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது.
இருப்பினும் அதிகாரிகள் மூன்றாவது முறையாகவும் மின்கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்த நிலையில் அது தோல்வியடைந்தது. இந்நிலையில் மீண்டும் நான்காவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இவ்வாறாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் மின்கட்டணத்தை 56% அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுக்கு அமைவாக மின் கட்டணம் உயர்த்தப்படும் பட்சத்தில், 200 வீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என எதிர்வுக்கூறப்படுகிறது.



