எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் காணாமல்போயுள்ளார்

எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் பல நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மயக்கவியல் நிபுணர் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தற்போது அவர் பணிக்கு திரும்ப மாட்டார் என மருத்துவ நிபுணர் வேறு ஒருவரின் வாட்ஸ்அப் எண் மூலம் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசேட வைத்தியர் வைத்தியசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
இந்நிலைமை எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு சத்திரசிகிச்சை நிலையங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்த வைத்தியசாலையில் இருந்த ஒரு மயக்க மருந்து நிபுணர் 10.01.2022 அன்று வெளிநாடு சென்றதுடன், மற்றுமொரு மயக்க மருந்து நிபுணர் 10.04.2023 அன்று வெளிநாடு சென்றுள்ளார்.
குறித்த வைத்தியர்கள் இதுவரை இலங்கை திரும்பவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சத்திரசிகிச்சைக்காக உள்நோயாளிகள் இரத்தினபுரி மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை பின்னர் தெரியவந்துள்ளது.



