இவ்வருடத்தில் மாத்திரம் 08 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 08 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். .
இதன்படி ஜனவரி 01 முதல் செப்டெம்பர் 04 வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 7,958 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையின் அறிவிப்பின்படி, 6,871 மில்லியன் பெறுமதியான 315 கிலோ 676 கிராம் ஹெரோயின், 908 மில்லியன் ரூபா பெறுமதியான 2,719 கிலோ 667 கிராம் கேரள கஞ்சா, 47 கிலோ 839 கிராம் உள்ளூர் கஞ்சா, 4 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 107 கிலோ 443 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 14 வெளிநாட்டு பிரஜைகளும், 166 இலங்கை பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடல் வழியாக போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான 03 படகுகளும் உள்ளூர் மக்களுக்கு சொந்தமான 32 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



