பிரமிட் பரிவர்த்தனைகள் மூலம் வாங்கிய சொத்துகளை விற்பனை செய்ய நீதிமன்றம் தடை!

சட்டவிரோத பிரமிட் பரிவர்த்தனைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் தடைசெய்யப்பட்டுள்ள Onmax DT' தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சம்பத் சந்தருவனுக்கு சொந்தமான 620 மில்லியன் ரூபா பெறுமதியான 20 சொத்துக்களை மாற்றுவதற்கும், விற்பனை செய்வதற்கும் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கடவத்தை காணி பதிவாளர்களுக்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பிரமிட் திட்டத்தில் சம்பாதித்த பணத்தில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதால், இந்த சொத்துக்களை மாற்றவோ அல்லது விற்கவோ தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
620 மில்லியன் ரூபா பெறுமதியான 20 சொத்துக்களில் அதி சொகுசு ஹோட்டலும் பல சொகுசு வீடுகளும் இருந்தன. ஹம்பாந்தோட்டையில் இரண்டு காணிகளும், கடவத்தை பிரதேசத்தில் இரண்டு காணிகளும், களுத்துறை பிரதேசத்தில் 10 காணிகளும் அமைந்துள்ளன.
சம்பத் சந்தருவன் தனது 20 சொத்துக்களையும் ஒரே நாளில் மனைவி மற்றும் உறவினர்களுக்கு மாற்றிக் கொடுத்து மோசடியை மறைக்க முயன்றதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் பத்து பேர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



