வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை மீட்க நடவடிக்கை!

மோசடியாக சொத்துக்களை பெற்று வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்படி, குறித்த பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் தெற்காசிய பிராந்திய பிரதிநிதி மார்கோ டீக்சீராவுக்கும், விஜயதாச ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம், உலக வங்கியின் சார்பில், மோசடியாக சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் வைப்புசெய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தருகிறது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய இலஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இவ்வாறான நபர்களை கையாளும் திறன் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும் கிடைக்கும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.



