ஹோமாகம பகுதியில் இனங்காணப்பட்டுள்ள மர்மப் பொருள்!

ஹோமாகம கட்டுவன கைத்தொழில் தொழற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென வெள்ளை நிற பஞ்சு போன்ற மர்ம பொருள் வெளியேறி பிரதேச முழுவதும் பரவியுள்ளது.
இதனால் சுற்றாடல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அண்மையில் தீப்பிடித்த கட்டுவான தொழிற்சாலை பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரசாயன திரவம் நீரில் கலந்துள்ளதனால் இவ்வாறு உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது முதலில் பஞ்சு உருண்டையாகத் தெரிந்தாலும், காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு சுற்றுப்புறச் சூழல் முழுவதும் பரவும் நுரை போன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது வழமைக்கு மாறான நிகழ்வு எனவும், அவை உடலில் பட்டால் அரிப்பு ஏற்படுவதாகவும், இதனை பார்க்க வந்த ஒருவர் வீட்டிற்கு சென்று வாந்தி எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதவிர, இவை அப்பகுதியின் குடிநீரில் கலந்தால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடுகளை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வாய்க்கால் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு நீர் செல்வதாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கரில் பால் பண்ணை செய்யும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளரிடம் வினவிய போது, குறிப்பிட்ட இடத்தில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயன திரவம் நீரில் கலந்து இவை உருவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், இந்த திரவம் வெளியேறும் இடத்தை முதலில் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



