உலகின் மிகச்சிறந்த மத்திய வங்கி ஆளுநர் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை ஆளுநர்

உலகின் மிகச்சிறந்த மத்திய வங்கி ஆளுநர்கள் 21 பேரில் ஒருவராக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குளோபல் பினான்ஸ் சஞ்சிகையினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச தரப்படுத்தலுக்கு அமைய அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு முதல் குளோபல் பினான்ஸ் சஞ்சிகையினால் மேற்கொள்ளப்படும் இந்த சர்வதேச தரப்படுத்தலில் 101 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பணவீக்க கட்டுப்பாடு, பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்தல், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வட்டி வீத முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, ஏ முதல் எவ் வரையிலான மட்டங்களில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கமைய, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஏ மட்டத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த தரப்படுத்தலின்போது, இலங்கையுடன் கொலம்பியா, டொமினிக்கன் குடியரசு, ஐஸ்லாந்து, இந்தோனேஷியா, மொராக்கோ மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் முன்னணியில் காணப்படுகின்றன.
குறித்த தரப்படுத்தலில் இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் ஷக்திகாந்தா தாஸ் முதலிடத்திலும் இரண்டாம் இடத்தை சுவிட்ஸர்லாந்தின் ஆளுநரும் மூன்றாம் இடத்தை வியட்நாமின் ஆளுநரும் இடம் பிடித்துள்ளனர்.



