வடக்கு கிழக்கு மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக, துரித, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில், நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு முறைமைகளை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
நேற்று, ஜனாதிபதி ஊடகமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
‘கொவிட் நோய்த்தொற்று மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடு எதிர்கொண்ட பொருளாதார பின்னடைவினால், நாம் முதலில் தயாரித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்நிலை காணப்பட்டபோதிலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களின் மூலம், நாடு மீண்டும் பொருளாதார ஸ்திர நிலையை அடைந்துவருவதன் காரணமாக, படிப்படியாக அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்துள்ளது.
தற்போது நாட்டின் குடிநீர்த் தேவையில் 62 சதவீதத்தை நிறைவுசெய்துள்ளோம். பல பிரதேசங்களில், நீர்வழங்கல் அமைச்சினால் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீருக்குப் பதிலாக, பல்வேறு மாற்று குடிநீர் மூலங்கள் ஊடாக, மக்கள் தமது குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்துகொள்வதன் காரணமாக, நாட்டின் மொத்த குடிநீர்த் தேவையில் 85 சதவீதத்தை நாம் நிறைவுசெய்தால், நாட்டின் குடிநீர் தேவையை முழுமையாக நிவர்த்திசெய்யலாம். கடந்த காலங்களில், தேசிய நீர்வழங்கல் அமைச்சு என்ற வகையில், கிராமங்களுக்கே சென்று மக்களின் குடிநீர்த்தேவை தொடர்பில் ஆராய்ந்து, பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமே, இந்த 62 சதவீத அடைவை எட்டியுள்ளோம். அதற்காக சபையின் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் சேவைகளை வழங்கமுடியாத கஷ்டப் பிரதேசங்களிலும் மற்றும் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும், அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் மூலம், அப்பிரதேச மக்களுக்கு அவசியமான குடிநீரை வழங்க பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் பெரும்பாலானவை தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் குடிநீர்த்தேவையை பூர்த்திசெய்வதற்காக, துரித, இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில், நனோ தொழில்நுட்ப நீர்சுத்திகரிப்பு முறைமைகளை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் பெரும்பாலானவைகளின் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டு வருகின்றன.
சிறுநீரக நோயாளிகள் அதிகமாக உள்ள பிரதேசங்களுக்காக, இந்த நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.’ என குறிப்பிட்டுள்ளார்.



