பொலிஸ் காவலில் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம்: 3 பொலிஸார் விளக்கமறியலில்

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்த பெண் ஊழியரான ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம், சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக அணிவகுப்புக்கு ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சாட்சியமளித்ததுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த மூன்று சந்தேக நபர்களையும் கண்டால் அடையாளம் காண முடியும் என பல சாட்சிகள் கூறியுள்ளதால், அவர்களை அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்பதால் சிறைச்சாலையில் அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடுமாறு சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.



