சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த 5 கோடி ரூபா பெறுமதியான 2 வாகனங்கள் மீட்பு

குருநாகல் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து வீட்டில் மறைத்து வைத்திருந்த 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இரண்டு சொகுசு ஜீப் வண்டிகளை பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று (31) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு வாகனங்களும் கஹதுடுவ, ரிலாவல பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு ஜீப் கன்டெய்னர் வாகனத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், மற்றைய ஜீப் உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட வாகனம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு ஜீப்களின் அனைத்து ஆவணங்களும் போலியானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனக் கடத்தல் தொடர்பில் பாணந்துறை வலன ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றுக் காலை பொலிஸ் குழுவொன்று குறித்த வீட்டைச் சோதனையிட்ட போது, இந்த இரண்டு வாகனங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகத்திற்குரிய வர்த்தகர் இந்த ஜீப்கள் தொடர்பில் போலியான தகவல்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து வாகனங்களின் சேஸ் எண்கள் மற்றும் எஞ்சின் இலக்கங்களை பதிவு இலக்கங்களுக்கு ஏற்ப மாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜீப்களை வாங்க வருபவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் மிகவும் கவனமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.
கார் உதிரி பாகங்களை இறக்குமதி செய்கிறேன் என்ற போர்வையில் இவர் இந்த மோசடியை ஆரம்பித்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



