இந்தியாவின் சாதனை குறித்து இஸ்ரோ தலைவரின் கருத்து

நிலவு மட்டும் அல்ல, செவ்வாய், வெள்ளி கோளுக்கும் செல்லும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி முன்வைத்த தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார். பூமியின் துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மனித சமூகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் விணகலத்தை இறக்கி ஆய்வு செய்து வருகிறது. விண்வெளித்துறையில் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் இந்தியாவின் இஸ்ரோவும் பல்வேறு சாதனைகள் செய்து வருகிறது. சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருக்கிறது.
கடந்த 2008-இல் சந்திராயன் 1 விண்கலத்தை இஸ்ரோ நிலவிற்கு அனுப்பியது. நிலவில் இருந்து அது எடுத்து அனுப்பிய ஏராளமான படங்களின் மூலம் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்தது. அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. சாஃப்ட் லேண்டிங் செய்ய முயற்சிக்கும் போது இந்த திட்டம் பின்னடைவை சந்தித்தது.
எனினும், சந்திரயான் 2 உடன் அனுப்பப்பட்ட ஆர்ப்பிட்டர் தொடர்ந்து பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 14 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. 41 நாட்கள் பயணத்திற்கு பிறகு சந்திரயான் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
உலக வரலாற்றில் வேறு எந்த நாடும் செய்யாத சாதனை இதுவாகும். தென் துருவத்தில் விண்கலத்தை ஆய்வு செய்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நிலவின் தென் துருவத்தில் இந்திய விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவின் தென் துருவத்தில் ரோவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நேற்று காலை இஸ்ரோ கட்டுபாட்டு மையம் சென்ற பிரதமர் மோடி , விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து கூறினார். இந்த நிலையில், நிலவு, செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களுக்கு செல்லும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:- நிலவு, செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களுக்கும் செல்லும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால், நமது நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
நமக்கு அதிக முதலீடுகள் தேவை. இதன் மூலம் விண்வெளித்துறை வளர்ச்சி அடைய வேண்டும்.
இது நமது திட்டம் என ஒட்டு மொத்த தேசமும் மேம்படுத்த வேண்டும். பிரதமர் மோடி முன்வைத்த தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த நாங்கள் தயராக இருக்கிறோம்" என்றார்.



