ருமேனியா எரிவாயு நிலைய வெடிவிபத்து - ஒருவர் உயிரிழப்பு

ருமேனியாவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையத்தில் (liquefied petroleum gas station) நேற்றையதினம் இடம்பெற்ற இரண்டு வெடி விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ருமேனியாவின் புக்கரெஸ்ட் பகுதியில் உள்ள கிரெவேடியாவில் அமைக்கப்பட்டுள்ள திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையத்தில் நேற்றையதினம் முதலாவது வெடி விபத்து ஏற்பட்டது.
இதன் மூலம் ஏற்பட்ட தீ அங்குள்ள இரண்டு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு தொட்டிகள் மற்றும் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவியது.
உடனடியாக அந்த பகுதியில் 700 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன் 25 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து நேற்றைய தினம் மாலை மீண்டும் அங்கு இரண்டாவது வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர் என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் மேலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



