ட்விட்டருக்கு அமெரிக்கா ரூ.2.89 கோடி அபராதம் விதித்தது.

தேர்தல் முறைகேடு புகார் தொடர்பான அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வெளியிட தாமதித்ததற்காக ட்விட்டருக்கு (தற்போது 'எக்ஸ்') ரூ.2.89 கோடி அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை கையாள முயற்சித்த குற்றச்சாட்டை விசாரித்த நீதிபதிகள் குழு டிரம்ப் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, நாட்டை ஏமாற்ற முயன்றதாகவும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்காக முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்றத்தின் காலக்கெடு முடிந்த பிறகும், நிறுவனம் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 'தகவல்களை முழுமையாக தருவதில் தாமதம் ஏற்படுத்தியது, நீதிமன்ற உத்தரவை அவமதித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டுவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.2.89 கோடி அபராதமாக விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.



