நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது
இரண்டு காணிகளை போலி பத்திரம் மூலம் சுவீகரித்தமை மற்றும் போலி பத்திரத்தை சமர்ப்பித்து 15 இலட்சம் ரூபா மோசடி செய்த இரண்டு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம்(27) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட போது வெளிநாட்டு கடவுச்சீட்டு, 11 ஓட்டுநர் உரிமங்கள், 04 தேசிய அடையாள அட்டைகள், பல்வேறு பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், வைத்தியசாலைகள், பிரதேச செயலகங்கள், பல்வேறு பாடசாலைகள் மற்றும் சிறைச்சாலைகள், பல்வேறு வங்கிகள், மதிப்பீட்டு திணைக்களம், வருமான வரி திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை பல்வேறு அதிபர்கள், காணி பதிவாளர்கள், திருமண பதிவாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் மற்றும் புகையிரத திணைக்களத்தின் பல்வேறு துறைகளில் 300 போலியான உத்தியோகபூர்வ முத்திரைகள் சந்தேகநபரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 28ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மோசடி விசாரணைப் பணியகமும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.