எதிர்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குழைக்கவே ஜனாதிபதி 13 திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்!
அரசியலமைப்பின் 13ஆவது திருத்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாவல பகுதியில் நேற்று (26.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “13ஆவது திருத்தத்தை பலப்படுத்த வேண்டுமாயின், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டபோது இணக்கமாக செயற்பட்ட எதிர்க்கட்சிகள் தற்போது பிளவுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக ஜனாதிபதி ரணில் எடுத்த சகல முயற்சிகளும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 13ஆவது திருத்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளதாக கூறினார்.
அத்துடன் 13ஆவது திருத்தத்தின் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக அமுல்படுத்தினால் வடக்கு பொலிஸ் பிரிவுக்கும், இராணுவத்துக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது அடிப்படையற்றது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
13ஆவது திருத்தத்துக்கும் இராணுவத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. 13ஆவது திருத்த விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மை நோக்கத்துடன் செயற்படவில்லை. ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு செயற்படுகிறார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.