ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் சர்வகட்சி மாநாடு இன்று!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வகட்சி மாநாடு இன்று (26) நடைபெறவுள்ளது.
இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வகட்சி மாநாட்டில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தமிழ் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முன்னர் அரசாங்கத்திற்குள் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஜே.வி. பி கட்சி இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமா என்பதில் சந்தேகம் உள்ளது. அதேநேரம் இந்தியாவை திருப்திப்படுத்தும் வகையில் சர்வகட்சி மாநாடு இடம்பெறக்கூடாது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களை போலவே ஏமாற்றும் செயற்பாடுகளையே இதன்போதும் அரசாங்கம் முன்னெடுக்குமாக இருந்தால் மாநாட்டில் இருந்து வெளியேறுவோம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு கட்சி தலைவர்களும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எவ்வாறாயினும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை பின் இந்த கட்சி மாநாடு நடைபெறவுள்ளதால் கவனம் பெற்றுள்ளது.