ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை

கடந்த 8ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால், நள்ளிரவில் மீன் பிடித்துவிட்டு அதிகாலையில் கரை திரும்பிய இலங்கை கடற்படையினர், சட்டவிரோதமாக எல்லை தாண்டியதாக படகு மற்றும் 15 மீனவர்களை கைது செய்தனர்.
எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிபதி, தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கை கடல் எல்லைக்குள் நுழைகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள இழு வலையை கொண்டு மீன் பிடிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்ச்சியாக நடைபெற்றாலும், மனிதாபிமான அடிப்படையில் இன்று விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், இன்று விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் இதே குற்றச்சாட்டில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் சந்தித்த நேரத்தில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



