புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் வேலை நேரத்தை 16 மணி நேரமாக நீட்டிக்க முடியும்!
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நடவடிக்கையாக உழைக்கும் மக்களின் உரிமைகளை உத்தேச புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் இல்லாதொழிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த புதிய சட்டத்தின் மூலம் இதுவரை உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்திய 13 சட்டங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாவும், இதன் மூலம் அரசாங்கம் மக்களைச் சுமைப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.
அத்துடன் புதிய தொழிலாளர் சட்டங்கள் 8 மணி நேர வேலையை ரத்து செய்து அதற்கு பதிலாக 12 மணி நேர வேலையை அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளதாகவும், ஊழியரின் ஒப்புதலின் பேரில் அதை 16 மணிநேரமாக நீட்டிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வாரம் 8 மணி நேர வேலை என்பது பல உயிர்களைப் பலிகொடுத்த உலகளாவிய போராட்டத்திற்குப் பிறகு அடையப்பட்ட உரிமை. அதை ஒழிப்பது உழைக்கும் மக்களுக்குப் பெரும் அடியாகும்,எனத் தெரிவித்த விஜித்த ஹேரத், மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்தார்.
உத்தேச சட்டமூலத்தை திரும்பப் பெற்று உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.