கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைசார் தரப்பினருடனான விசேட கலந்துரையாடல் நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது எதிர்வரும் 20ம் திகதி தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைசார் திணைக்கள தரப்பினரின் அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சுமார் 2 மணித்தியாலத்துக்கும் அதிகமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது பலத்தரப்பட்ட தரப்பினரின், கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து, நிலைப்பாட்டை அறிவித்த முல்லைத்தீவு நீதவான் ரி.பிரதீபன், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட துறைச்சார் திணைக்களங்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அன்றைய தினம் அகழ்வுப் பணித் தொடர்பில் தீர்மானத்துக்கு செல்லலாம் என நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த அகழ்வுப் பணியானது, மழைக்காலத்துக்கு முன்பதாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான செலவீனங்களை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக இடம்பெற வேண்டும் எனவும் நீதவான் அறிவித்தார்.
அதேநேரம், சர்வதேச நியமங்களுக்கு அமைய, அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அதனைக் கண்காணிப்பதற்காக பிரவேசிக்கும் எந்தவொரு அமைப்புக்கும் தடையில்லை என்றும் நீதவான் குறிப்பிட்டார்.